
தமிழர்களுடைய ஜனநாயக போராட்ட வரலாற்றில் மிகவும் உச்சமான பலமாக இருந்தது தமிழீழ விடுதலைப்புலிகளின் காலம் என்பதனை யாவரும் அறிந்திருப்பீர்கள் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களை தேர்தல் தொடர்பாக தெளிவூட்டும் கலந்துரையாடல் நிகழ்வானது இன்று (திங்கட்கிழமை) நற்பிட்டிமுனை சுமங்கலி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மாவை சேனாதிராஜா,”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஜனநாயக மக்கள் கட்சியை ஜனநாயக ரீரோட்டத்தில் இணைத்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்தக்கட்சி தற்போது எமது கட்சியுடன் இணைந்து உள்ளூராட்சித் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கின்றது.
இன்றைய காலத்திற்கு ஏற்றாற்போல் எதிர்கால சந்ததியினராகிய இளைஞர்களை அரசியல் களத்தில் இறக்க வேண்டிய தேவையும் உள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு எமது கூட்டமைப்பானது இம்முறை முன்னாள் போராளிகளையும் தேர்தலில் களமிறக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆயுத போராட்டமானது 2009 மே.18 அன்று ஒரு எல்லையை அடைந்தது அதன்பிற்பாடு தமிழ் மக்களுடைய உச்ச பலம் வழுவிழந்து காணப்பட்டது. அவ்வாறு இருந்தபோதும் எமது மக்கள் தங்களது பலத்தினை தேர்தல் காலங்களில் வாக்குப்பலம் மூலம் நிருபித்து வெற்றியும் கண்டிருக்கின்றார்கள்.
இதே போன்றுதான் ஆயுதப்போராட்டம் முடிவுற்றதன் பின்பு நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் எமது மக்கள் த.தே.கூட்டமைப்புத்தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்பதனை நிருபிக்க தவறவில்லை.
அவ்வாறு நிருபித்ததன் காரணமாகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டும் என சம்பந்தன் தலைமையிலான குழுவினை அமெரிக்கா அழைத்து தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சனைகளைக் கேட்டறிந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது” என மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.