
புதிய பேரூந்து நிலையத்தில் சேவைகளை ஆரம்பிப்தற்கு ஒத்துழைக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சரினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட உத்தரவு உதாசீனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வழமைபோன்றே பழைய பேரூந்து நிலையத்திலிருந்தே சேவைகள் இடம்பெற்றுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டு கடந்த ஒரு வருட காலமாக பயன்பாடின்றி காணப்படும் புதிய பேரூந்து நிலையத்தினை இயக்கும் நோக்கோடு வட மாகாண முதலமைச்சரினால் (இன்று) 25 ஆம் திகதியில் இருந்து தனியார் மற்றும் அரச பேரூந்துகள் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், இது வரைகாலமும் அரச பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டு வந்த நகரசபைக்கு சொந்தமான பகுதியை தனியார் வாகனங்கள் சென்று வருவதற்கு மாத்திரம் அனுமதி வழங்கும் வகையில், பேரூந்துகள் உட்செல்லாமல் இருக்க 24ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் மூடுமாறு வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு முதலமைச்சர் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, பழைய பேரூந்து நிலையம் மூடப்படாமல் காணப்பட்டதுடன் பொலிஸார் மற்றும் வவுனியா நகரசபை செயலாளர் உட்பட்ட உத்தியோகத்தர்கள் அவ்விடத்திற்கு பிரசன்னமாகியிருந்தனர்.
எனினும் பொலிஸார் தமக்கு பேரூந்து நிலையத்தினை மூடுமாறு உத்தரவு வரவில்லை எனவும் நகரசபையினரே மூட வேண்டும் என தெரிவித்ததுடன் அவ்வாறு மூடும் பட்சத்தில் தாம் பாதுகாப்பு தருவதாகவும் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறான சூழலில் பழைய பேரூந்து நிலையப்பகுதிக்கு வருகை தந்த வவுனியா தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி, அவ்வாறான உத்தரவு தமக்கு கிடைக்கவில்லை எனவும் முதலமைச்சர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கே உத்தரவு இட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் முதலமைச்சரின் உத்தரவை பொலிஸார் கடைப்பிடிக்காமையினால் வழமைபோன்றே இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்துகள் பழைய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுத்திருந்தன.